Wednesday, June 11, 2014

திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில்



பக்காப் படிகள், திருவைகள், உலக்கைகள்,
கிட்டில்கள், குதில்களின் வரிசையில்
அருங்காட்சியகத்தில்
அடுத்து வைக்கப்பட்டிருப்பது
பாட்டி தாத்தாக்களைத் தான்
வேறு முகத்தை எடுத்து நம் உடலில்  மாட்டிக் கொண்டதைப் போல் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கழிந்த பின்னும் நம் தேசத்திற்கென்று தனித்துவம் மிக்க ஒரு கல்வி முறையை உருவாக்கவில்லை என்ற ஆதங்கம் வெகுநாட்களாக என்னுள் உண்டு.
            மூடு காலணிகளுடனும், கழுத்துப் பட்டைகளுடனும் முதுகு நிறைய புத்தக மூட்டையுடனும் பள்ளிக்குச் சென்று வருவது மட்டுமா கல்வி?
            நம் இந்தியப் பண்பாடு, வேதங்கள், உபநிடதங்கள், பக்தி இலக்கியங்கள், தேவாரப் பதிகங்கள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள், குணங்குடியார், பீரப்பா மெஞ்ஞானப் பாடல்கள், நீதி இலக்கியங்கள் இவற்றை எல்லாம் புறந்தள்ளி உலக மயமாதல் என்ற பெயரிலே இங்கிலாந்துப் பாடத்திட்டத்தை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?  என நினைத்த போது, ஆனந்த விகடனிலே அந்த அறிவிப்பு வந்தது.
                இந்தியக் கல்வி முறையை வேராகக் கொண்டு
 திருமதி. லதாரஜினிகாந்த் சென்னை வேளச் சேரியில் 'தி ஆஷ்ரம்' என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள் என்பதும், அதில் டாஸ்க் என்ற புதிய பாடப் பிரிவைத் தொடங்கி வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதையும் ஆனந்த விகடனில் திரு. மதன் அவர்கள், திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலில் தெரிவித்திருந்தார்கள்.
                'கல்வி முறையில் மாற்றம் தேவை' என்ற திருமதி. லதா ரஜினிகாந்தின் கட்டுரை ஆனந்த விகடனில் 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்; எனும் தலைப்பில் 36 வாரம் வந்தது. முப்பத்தாறு வாரக் கட்டுரைகளையும் வரிக்குவரி வாசித்தேன், கத்தரித்து  நூலாகக் கட்டமைப்பு செய்து வைத்திருந்தேன்.
            ஒவ்வொரு, வாரமும் விகடனில் வரும் தொடரைப் 'பாலம்'
அமைப்பின்
சமூக சேவகர் பாலம் பா. கலியாண சுந்தரம் அவர்களுடன் விவாதித்திருந்தேன்.  'அம்மையாரின் அந்நூல் பற்றிய உன் கருத்தியலை விமர்சனமாக எழுதேன்' என்றார்கள்.  எழுதினேன் 82 பக்க அளவில் என் கட்டுரை நீண்டது...  பாலம் ஐயா மூலம் திருமதி லதா ரஜினி அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன்.
பாலம் பா. கலியாணசுந்தரனார் அப்பழுக்கற்ற காந்தியவாதி
'தேவையே பெரிதென்று தேடுவோர் பலரிருக்க
சேவையே உயிரென்று கருதி உருக வந்தார்
பாவை மணமுமின்றி பந்தபாசம் ஏதுமின்றி
நாவை அடக்கி வாழும் நற்சேவை முனிவரிவர்

என்று அவர் வாழ்க்கை வரலாற்றில் நான் எழுதியிருந்தேன்.   பாலம் ஐயா என் விமர்சனக் கட்டுரையைத் திருமதி. லதா ரஜினிகாந்த் அம்மையாரிடம் தந்திருந்தார்.
                பிப்ரவரி 2, 1998, நான் பாளை சேவியர் கல்லூரியில் எம்பில் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறேன். திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து கடிதம் வருகிறது.
                28.02.1998 ஆம் நாளில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும். 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து
கொள்ள வேண்டும் என்று அக்கடிதத்தில் திருமதி. லதா ரஜினிகாந்த் என்னை அழைத்திருந்தார்கள்.
            என்னால் நம்ப முடியவில்லை! தன் தொடரின் சாதக பாதகங்களை விமர்சித்திருந்த ஒரு சாதாரண மாணவனை அந்நூல் வெளியீட்டு விழாவுக்கே அழைத்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
            அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி விசாலப் பார்வையால் யாவரையும் தமதாக்கி அன்பு அன்னையாய் பாசம் பொழிய ஒரு சில பேரால் மட்டுமே முடிகிறது.
                உடன் விழாவில் பங்கேற்பதாகக் கடிதம் அனுப்பினேன்.  அங்கிருந்து ஓரிரு நாட்களில் பதில் வந்தது.  பிப்ரவரி 28 அன்று காலையில்
‘போயஸ்
கார்டன் வாருங்கள்’ என்று திருமதி லதா ரஜினிகாந்த் பதில் எழுதியிருந்தார்கள்.
            இன்ப அதிர்ச்சியில் அன்றிரவு தூக்கம் பிடிக்கவில்லை.  ஒரு பக்கம் நம் எழுத்தை மதித்து அழைத்திருக்கிறார்களே! என்ற மகிழ்ச்சி, மறுபுறம் வெகுநாட்களாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்து ஆனால் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் ஏதும் அமையாத இனிய மனிதர் திரு. ரஜினி காந்த் அவர்களை, அவர்களுடைய இல்லத்திலேயே, அதுவும் அவர்களுடைய அழைப்பின் பேரில் சந்திக்கப் போகிறேன் என்ற போது எப்படித் தூக்கம் வரும்?
            'பெரியவர்களை முதன் முதலாய் சந்திக்கப் போகிறோமே' என்ன பரிசு தரலாம்? என்று மண்டையைப் போட்டு உடைத்தெடுத்தேன்.  என்ன கொண்டு சென்றாலும் அது ஏற்கனவே அவர்களிடம் இருக்கத்தானே செய்யும்.
            திடீரென உள்மனம் உரக்கச் சொல்லியது பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை நடையில் எழுது, அதுவே மிகச் சிறந்த பரிசாக திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு அமையும்' என்றது.
            இரண்டே நாளில் எழுதி முடித்தேன்.  அழகான முன்னுரையை
திரு
. ரஜினிகாந்த் அவர்களை மனத்தில் கொண்டு எழுதினேன்.
            அவலைக் கட்டிமுடித்து, பகவான்  ஸ்ரீ. கிருஷ்ணரைச் சந்திக்கச் சென்ற குசேலனாய் சென்னை புறப்பட்டேன்.
            போயஸ் கார்டன் எந்தப் பக்கத்திலிருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது.
            ஆட்டோவை அழைத்தேன்.  முதலமைச்சர் வீடெல்லாம் உள்ள பகுதி உள்ளே கொண்டு விட முடியாது' என்று சொல்லி சாலையோரம் உள்ள மகளிர் கல்லூரிக்கு அருகில் விட்டுச் சென்று விட்டார். ஓட்டுநர்.
            நடக்கத் தொடங்கினேன்.  நெருக்கடியான சென்னை மாநகரில் சோலைச் சொர்க்கமாய் போயஸ் கார்டன், ஓங்கி உயர்ந்த அழகு மரங்களும் குல்மெஹர் பூக்களும் அப்பகுதியை இன்னும் அழகாக்கின.
            இருக்குமிடம் அருமையாக இருப்பதால், நடக்கும் பாதையும் அருமையாக இருக்கத்தானே செய்யும்!
            நம் மனத்திற்குப் பிடித்த மனிதர்களைச் சந்திக்கச் செல்கிற பொழுதுகளுக்குத் திடீரென தேன் தடவிய இனிப்பு எங்கிருந்து ஒட்டிக் கொள்ளும் என்று தெரியாது,  நாம் சந்தோஷமாயிருக்கும் போது எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாய் ஓர் உணர்வு.


No comments:

Post a Comment