Saturday, June 14, 2014

கும்பகோணம் தாராசுரம் திருக்கோவில்



அந்த நாளில் அவ்வளவு அருமையான சொல்பேசும் கற்களோடு..அல்ல..அல்ல..கற்காவியங்களோடு கழிப்பேன் என நான் நினைக்கவில்லை.

அன்று மாசிமகம் இஸ்லாமியத் தமிழ்இலக்கிய மாநாடு சென்ற அந்த மாலைப்பொழுதில் சற்றும் எதிர்பாரா வகையில் தாராபுரம் போனேன்.

கும்பகோணத்திலிருந்து சிற்றுந்தில் கிளம்பியபோது பட்டீஸ்வரம் போய்வருவதாகத்தான் திட்டம் அன்றிரவே ‘ரதிமீனா”பேருந்தில் நெல்லை கிளம்பவேண்டிய சூழல். பட்டீஸ்வரம் போகும்வழியில் இடப்புறத்தில் மிகப்பழமையான கோபுரம் தெரிந்தது.

அப்போதே அக்கோவிலைத் தரிசிக்க மனம் உறுதிகொண்டது. 

பட்டீஸ்வரம் போனோம்,துர்கையைத் தரிசித்தோம்,ஞானவாவியைக் கண்டு வியந்தோம்.மீண்டும் சிற்றுந்துப் பயணம். ஐந்து நிமிடத்தில் தாராசுரம் வந்தது.

இறங்கித் தேநீர்க்கடையில் தேநீர் அருந்தியபடி தூரத்தில் தெரிந்த தாராபுரம் கோவிலைப் பார்த்தோம்.”முன்பெல்லாம் மூன்று போகம் விளைந்த மண் இப்போது ரியல்எஸ்டேட்டால் நாசமாகிப்போனது..நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் அந்தக்கோவில் பனிரெண்டாம் நூற்றாண்டுக்கோவில் சோழமன்னன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது.”என்று தேநீர்க்கடை பாய் சொன்னபோது வியப்பாய் இருந்தது.

பழமையான அந்தக் கோவிலைத் தொல்பொருள் ஆய்வுத்துறை மிகப்பரந்த புல்வெளியோடு மிக அழகாய் பராமரித்து வருகிறது.

  ஐராவதேஸ்வரர் கோயில் என்ற பெயரில் 85 அடி உயர்ந்த ராஜகோபுரத்தோடு கம்பீரமாய் நின்றது.வாசல் நந்தி உருட்டிப்பார்க்கும் கல்லுருண்டைகளோடு உயிர்த்துடிப்போடு இருந்தது.

பெருமாள் கோவில் கற்கண்டாய் அந்தக்கணம் இனித்தது.செம்பரிதி தன் கதிர்களை வீசி ஐராவதேஸ்வரர் கோயில் சிற்பங்களை இன்னும் செறிவாக்கிக் கொண்டிருந்தது.படிகள் வழியே உள்நுழைகிறோம்.மிகப்பெரிய பிரகாரம்..நுழைமுகத்தில் துல்லியமான ஆரக்கால்களோடு அழகான கல்சக்கரம். ஐராவதம் என்பது இந்திரனின் யானை. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில்  என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.கோவிலுக்குள் நுழைகிறோம்.சக்கரங்கள் பூட்டப்பட்டுள்ள தேரை கல்குதிரை இழுத்துச் செல்வதைப் போன்ற சிற்பம் உயிர்த்துடிப்பாய் அமைக்கப்பட்டுள்ளது.மிகச்சிறிய பரப்பிலும் மிகஅழகான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.அறுப்பத்து மூவர் சிலைகள் இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளன.ஒட்டக்கூத்தர் தக்கையாகப்பரணியை இக்கோவிலில் அரங்கேற்றியதாகக் கூறுகின்றனர்.இக்கோவிலைச் சுற்றி அகண்ட அகழி அமைந்துள்ளது..மழைக்காலங்களில் தண்ணீரில் இக்கோவில் மிதப்பதைப் போல திகழ்கிறது.திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவில் இசைத்தூண்களை நினைவுபடுத்தும் சப்தசுவர இசைப்படிகள் இசையுலகிற்கு நமை இட்டுச்செல்கின்றன.இயற்கைச் சீற்றத்தில் சிக்கிக் கோவிலின் மிகஉயர்ந்த கோபுரம் மொட்டையாய் நிற்பது பார்க்க வருத்தம் தருகிறது.முப்பத்திரண்டு ஆரக்கால்களோடு மிக நுட்பமாய் செதுக்கப்பட்டிக்ருக்கிறது கல்தேரின் சக்கரம்.இரண்டாம் ராசராசன் கற்களின் வழியே சொற்களை வடித்து இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறான்..

சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி












No comments:

Post a Comment